திரைப்பட இசையமைப்பாளர் சந்திரபோஸ் குடும்பத்திற்கு நடிகர் விஷால் நிதியுதவி

25/11/2016

Friday (வெள்ளிக்கிழமை)


சந்திரபோஸ்
இசையமைப்பாளர் சந்திரபோஸ், 1980களில் பிரபலமான இசையமைப்பாளராக இருந்தவர். அந்தக்கால கட்டத்தில் ஏவிஎம் நிறுவனம் தயாரித்த பெரும்பாலான திரைப்படங்களுக்கு இசையமைத்தவர். அவர் தமது 60வது வயதில் 2010ஆம் ஆண்டு காலமானார். அதன்பின்பு அவரது குடும்பம் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. சந்திரபோஸின் மனைவி ராஜகுமாரி மருத்துவ செலவுக்குக்குக் கஷ்டப்படுவதைக்   கேள்விப்பட்ட  நடிகர் விஷால் தனது தேவி அறக்கட்டளை மூலமாக சந்திரபோஸ் குடும்பத்துக்கு நிதியுதவி அளித்துள்ளார்.

நன்றி விஷால்

சங்கீத உலகின் பீஷ்மர் எம். பாலமுரளி கிருஷ்ணா காலமானார்

22/11/2016

செவ்வாய்க்கிழமை (Tuesday)



06-07-1930 - 22-11-2016


சங்கீத உலகின் பீஷ்மர் மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86.. அரசியல் கட்சித் தலைவர்களும் சங்கீத கலைஞர்களும் அஞ்சலி செலுத்தினர். பத்ம விபூஷண் உட்பட பல உயரிய விருதுகளைப் பெற்றவர். பக்த ப்ரகலதா என்ற படத்தில் நாரதர் வேடத்தில் நடித்திருப்பார். 

அவருக்கு கர்நாடக இசைதான் பிரதானம் என்றாலும் அவர் திரைப்படத்தில் பாடிய பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் பாடல்கள்தான். 


   01)  பாண்டவர் வனவாசம் (தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியானது)  
   02)   திருவிளையாடல்           
   03)   நூல்வேலி                        
   04)  கலைக்கோயில்                
   05)  கவிக்குயில்                                          
   06)  சாது மிரண்டால்
   07)  சுப தினம்
   08)  கண்மலர்
   09)  உயர்ந்தவர்கள்
   10)  குமார சம்பவம்
   11)  வடைமாலை
   12)  தெய்வத்திருமணங்கள்
   13)  மிருதங்கசக்ரவர்த்தி
   14)  இசை பாடும் தென்றல்
   15)  மகாசக்தி மாரியம்மன்
   16)  திசை மாறிய பறவைகள்
   17)  நவரத்தினம் 
   18)  பசங்க


நண்பரும் "மிருதங்கசக்ரவர்த்தி" படத்தின் தயாரிப்பாளருமான திரு. கலைஞானத்திடம் அப்படத்தில் திரு. பாலமுரளி கிருஷ்ணா பாடிய பாடலைப் பற்றிய தகவல்களை பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டேன்.  உடனே, தாராளமாக என்று சொல்லி தொடர்ந்தார், படத்தில் சிவாஜிக்கும் நம்பியாருக்கும் இசைப் போட்டி, சிவாஜி மிருதங்கம் வாசிப்பார்,  நம்பியார் பாடுவார். சிவாஜிக்கு மிருதங்கம் வாசித்தவர் உமையாள்புரம் கே. சிவராமன், நம்பியாருக்கு பாடியவர் மறைந்த பாலமுரளி கிருஷ்ணா. கதைப்படி, நம்பியார் தோற்க வேண்டும், அப்படியென்றால், பாலமுரளி தோற்குமாறு பாடவேண்டும். இதை பாலமுரளி கிருஷ்ணாவிடம் எப்படி சொல்வது என்ற பயம், ஏனென்றால், பாலமுரளி கிருஷ்ணா மிகப்பெரிய சங்கீத வித்வான். ரிக்கார்டிங் ஸ்டுடியோவில் இருந்த அனைவருமே பயந்தோம். ஆனால் அவர், பாடவேண்டிய வரிகளை படித்துப் பார்த்தார். சிரித்துக்கொண்டே, போட்டியில் தோற்குமாறு பாட வேண்டும் அவ்வளவுதானே என்று ஒரே டேக்கில் பாடிக்கொடுத்தார். மிகப்பெரிய பெருந்தன்மையான மனிதர் என்று சொல்லி முடித்தார் திரு. கலைஞானம்.

இந்த நேரத்தில் மறைந்த இசையமைப்பாளர்  எம்.எஸ்.வி அவர்கள் சொன்ன " இறக்கும் மனிதர்கள் இறவாப் பாடல்கள்" என்ற வார்த்தைகள்தான் நினைவுக்கு வருகிறது. பாலமுரளி கிருஷ்ணா இவ்வுவுலகை விட்டு மறைந்தாலும், அவர் விட்டுச் சென்ற இசைச் செல்வம் என்றும் மறையாது.

அவரது ஆன்மா சாந்தியடையட்டும். 



மேற்ச்சொன்ன படங்களின் பெயர்களை தந்து உதவியவர் கவிஞர் பொன். செல்லமுத்து.








இளையராஜா டியூனை பயன்படுத்திய ஹிந்தி இசையமைப்பாளர்

19/11/2016
Saturday (சனிக்கிழமை)



செல்லாத 1000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் வங்கியில் கொடுத்து மாற்றுவதில் ஏற்படும் சிரமங்களை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தாலும், தொலைக்காட்சியில் வராத ஒருசில  செய்திகளை நாளிதழ்களில் படிக்க முடியும். அப்படி ஒரு செய்தியை படித்துக்கொண்டிருந்த போது, இன்று வெளிவரும் படங்கள் அடுத்த வாரம் வெளிவரும் படங்களைப் பற்றி பார்த்துக்கொண்டிருந்த போது, ஹிந்தியில் ஷாருக்கான், அலியா பட் நடித்து கௌரி ஷிண்டே எழுதி இயக்கிய  “டியர் ஜிந்தகி” என்ற படம் வெளிவர இருக்கிறது. 

கௌரி ஷிண்டே ஏற்கனவே “இங்கிலிஷ் விங்கிலிஷ்” என்ற ஹிந்திப் படத்தை இயக்கியுள்ளார். இவருடைய கணவர் திரு. ஆர். பாலகிருஷ்ணன் என்ற பால்கி. இவர் ஒரு தமிழர். தமிழராக இருந்தாலும், “சீனி கம்” “பா”, ஷமிதாப் போன்ற ஹிந்திப்படங்களை இயக்கியவர். இவருடைய படங்களுக்கு இசையமைக்க, பால்கி, இளையாராஜவைத்தான் நாடிச் செல்வார். இளையராஜாவும் தமிழில் இசையமைத்த ஏதாவது ஒரு பாடலின் டியூனை பால்கியின் ஹிந்திப்படத்திற்கும் பயன்படுத்துவார். அதன் வரிசையில் பால்கியின் மனைவி கௌரி ஷிண்டே இயக்கிய “டியர் ஜிந்தகி” என்ற படத்திற்கு இசையமைத்தது அமித் திரிவேதி என்றாலும், இளையராஜாவின் புகழ்பெற்ற மெலொடியான ரொமாண்டிக் ட்யூனை அமித் திரிவேதி பயன்படுத்தியிருப்பார்.  

இளையராஜா, முதன்முதலாக, புகழ்பெற்ற இந்த டியூனை 1983ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த "சத்மா" என்ற ஹிந்திப் படத்தில் அறிமுகப்படுத்தியிருப்பார். அடுத்து, ரஜினிகாந்த் நடித்து 1984ஆம் ஆண்டு வெளிவ்ந்த  "தம்பிக்கு எந்த ஊரு" என்ற தமிழ்ப்படத்தில் இரண்டாவது முறை பயன்படுத்தியிருப்பார். இளையராஜாவின் டியூனில் இசையமைப்பாளர் அமித் திரிவேதி "டியர் ஜிந்தகி" என்ற ஹிந்திப்படத்திற்கு  மூன்றாவது முறையாக ஹிந்திப்பாடலை பதிவு செய்துள்ளாளார். மூன்றாவதாக  பதிவு செய்த ஹிந்திப் பாடலும் மிக அருமையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று பாடல்களையும் கேளுங்கள். அநேகமாக, இந்தியத் திரைப்பட வரலாற்றில் ஒரே டியூனை மூன்று வெவ்வேறு படங்களுக்கு பயன்படுத்தியிருப்பது இதுவே முதன்முறையாக இருக்கும்.













பாடகராக 55 ஆண்டுகளை பூர்த்தி செய்த கே.ஜே.யேசுதாஸ்

14-11-2016
திங்கள்கிழமை (Monday)


கே.ஜே.ஏசுதாஸ்

தேனினும் இனிமையான குரலில் பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடி உலகமெங்கும் இருக்கும் இசை ரசிகர்களின் மனதை பறித்த காந்தர்வ குரலுக்கு சொந்தக்காரரான திரு. கே.ஜே.ஏசுதாஸ், இன்று பாடகராக 55 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளார்.

1961ஆம் ஆண்டு, இதே நாள் (நவம்பர் 14 1961) ஜாதி பேதம் மாதா துவேஷம் என்ற பாடலை இசையமைப்பாளர் M.B. Srinivasan  இசையில், திரு. கே.ஜே.ஏசுதாஸ் பதிவு செய்து தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார்.  அன்று முதல் இன்று வரை, அஸ்ஸாம், கொங்கனி மற்றும் காஷ்மீரி மொழிகள் தவிர, இந்தியாவில் உள்ள ஏனைய மொழிகளிலும் மற்றும் ஒரு சில வெளிநாட்டு மொழிகளிலும் சேர்த்து 40,000 பாடல்களை பாடியுள்ளார்.

திரு. கே.ஜே.ஏசுதாஸ், சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை 7 முறையும், பிலிம்பேர் விருது 5 முறையும் மற்றும் பல்வேறு மாநில விருதுகளை 43 முறையும் பெற்றுள்ளார்.

திரு. கே.ஜே.ஏசுதாசுக்கு 1975ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2002ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதும் மத்திய அரசால் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.

தமிழ்த் திரைப்படங்களில் ஏறத்தாழ அவர் பாடிய அனைத்துப்பாடல்களுமே சூப்பர் ஹிட்டாக அமைந்துள்ளது. “பொம்மை” திரைப்படத்தில் இடம் பெற்ற நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற பாடலில் தொடங்கி, “அபூர்வராகங்கள்” படத்தில் பாடிய அதிசய ராகம் ஆனந்த ராகம் மற்றும் “சிந்துபைரவி” படத்தில் பாடிய  அனைத்துப் பாடல்கள்  என்று அடுக்கிக்கொண்டே போகலாம். திரு.கே.ஜே.எசுதாஸ் பாடிய சில தமிழ்த்திரைப்பட பாடல்களை கீழே காணலாம்.

   1. பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்        -  மீனவநண்பன்
   2. அந்தமானைப் பாருங்கள் அழகு     -  அந்தமான் காதலி
   3. உன்னைத்தானே தஞ்சம் என்று     -  நல்லவனுக்கு நல்லவன்
   4. கண்ணே கலைமானே              -  மூன்றாம்பிறை  
   5. தூங்காத விழிகள் ஒன்று           -  அக்னிநட்சத்திரம்
   6. அகரம் இப்போ சிகரமாச்சு          -  சிகரம்
   7. மலரே குறிஞ்சி மலரே             -  டாக்டர் சிவா
   8. தென்றல் வந்து என்னைத்தொடும்  -  தென்றலே என்னைத்தொடு
   9. மூக்குத்தி பூ மேலே               -  மௌனகீதங்கள்
  10. அதிகாலை சுபவேளை             -  நட்பு

  திரு. கே.ஜே.ஏசுதாஸ் அவர்களின் இசைப்பயணம் தொடரட்டும்.
  












இசை ரசிகர்களை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதியின் "சேட்ஜி" பாடல்

08/11/2016
Tuesday (செவ்வாய்க்கிழமை)



"மீசையை முறுக்கு" என்ற படத்தை "அவ்னிஸ் மூவீஸ்"  நிறுவனம் மூலம் தயாரித்து வருகின்றனர் இயக்குநர் சுந்தர்.C மற்றும் குஷ்பு சுந்தர்.
இப்படத்திற்கான கதை-வசனம்-பாடல்களை எழுதி இசையமைத்து இயக்குகிறார் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி.

படத்தின் ப்ரோமோ சாங்காக (Promo Song) சேட்ஜி என்று தொடங்கும் பாடலை வெளியிட்டுள்ளனர். இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இப்பாடல் பிரம்மாண்ட இயக்குநர் சங்கரையும் கவர்ந்துள்ளது.  இதை தனது டுவிட்டர் பக்கத்தில் இயக்குநர் சங்கர்  குறிப்பிட்டுள்ளார்.






"பைரவா" படத்தில் நடிகர் விஜய் பாடிய துள்ளல் மிகுந்த காதல் பாடல்

01-11-2016
Monday (திங்கட்கிழமை)

விஜய் நடித்து பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் "பைரவா" திரைப்படத்தில் துள்ளல் மிகுந்த காதல் பாடலை விஜய் பாடியுள்ளதாக தெரிகிறது. விஜய், தான் நடிக்கும் படத்தில் குறைந்தபட்சம் ஒரு பாடலையாவது பாடிடுவார். அந்தவகையில் இந்தப்பாடலும் இசையும் நன்றாக அமைந்துள்ளதாக தெரிகிறது. படத்திற்கான இசை சந்தோஷ் நாராயணன்.  இசை வெளியிட்டு விழா (Audio Launch) இந்த மாதம் அல்லது அடுத்த மாதம்  நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






இந்தியாவின் இசை கிராமம்

22-10-2016
Saturday (சனிக்கிழமை)

வயலின் மேதை அட்ரியாவுடன்  ஷெனாய் மேதை கிர்பால் சிங்


பொதுவாக, இசை என்பது நம்மில் பலருக்கு படிப்புக்கு அடுத்துதான். நம் நாட்டில், பெற்றோர்கள், குழந்தைகளுக்கு  2 வயது முதல் 9வது வகுப்பு படிக்கும் வரை இசையைக் கற்றுத்தருவார்கள். 10ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு எழுத வேண்டும் என்ற அச்சத்தோடு இசை பயிலுவதிலிருந்து  குழந்தைகளை நிறுத்திவிடுவார்கள். ஒரு சில மாணவ மாணவியர் பெற்றோர்களின் அனுமதியோடு 10வது பொதுத்தேர்வு இருந்தாலும், இசையையும் பயிலுவார்கள்.

ஆனால், பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் பைனி சாகிப் கிராமத்தில் கடந்த 100 ஆண்டுகளாக, ஒவ்வொரு குழந்தைக்கும் பாரம்பரிய ஹிந்துஸ்தானி இசையின் அடிப்படைகளை (Fundamentals) கற்றுத்தருகிறார்கள். எனவே, தற்போது அந்த கிராமத்தில் இருக்கும் உழவர்கள், கடை முதலாளிகள், வேலைபார்ப்போர் என்று அனைத்துதரப்பு மக்களும்  பாரம்பரிய ஹிந்துஸ்தானியின் அடிப்படைகளை தெரிந்து வைத்துள்ளார்கள். இசை, பைனி சாகிப் கிராமத்தில் வசிக்கும் ஒவ்வொருத்தரின் வாழ்வில் ஒரு அங்கமாகி விட்டது.

குழந்தைகள் அனைவரும் ஒவ்வொரு நாளும், தங்களுடைய வீட்டுப் பாடங்களை முடித்த பின்னர் தாங்கள் பயிலுகின்ற இசைக் கருவியை எடுத்துக் கொண்டு இசைக்கென்று இருக்கும் அறைக்குள் நுழைவார்கள்.  அங்கே பல்வந்த் சிங் நம்தாரி காத்துக்கொண்டிருப்பார். பல்வந்த் சிங் தேர்ந்தெடுத்த பாரம்பரிய இசைப்பாடகர். இவர், குழந்தைகளுக்கு பாடுவதற்கு அல்லது இசைக்கருவியை இசைப்பதற்கு சொல்லிக்கொடுப்பதுமட்டுமல்லாமல், ராகங்களைப் பற்றி சொல்லிக்கொடுக்கிறார். காலையில் மற்றும் மாலையில் என்ன ராகம் பாடவேண்டும் மற்றும் இசை நுணுக்கங்களையும் கற்றுக்கொடுக்கிறார்.

இன்றைக்கு சர்வதேச அளவில் ஷெனாய் (Taar-Shehnai) வாசிப்பதில் புகழ் பெற்று விளங்கும் கிர்பால் சிங் (Kirpal Singh) இந்த கிராமத்திலிருந்து வந்தவர்தான்.


இப்படி இசையில் இந்தியாவிற்கே முன்மாதிரியாக   பைனி சாகிப் (Bhaini Sahib village in Ludhiana district, Punjab State) கிராமம் திகழ்கிறது.  இசை தெரிந்த ஒவ்வொருவரும் கண்டிப்பாக செல்லவேண்டிய கிராமம் இது.




வானொலி உரையாடலுக்கு ஒப்பனை செய்து கொண்ட இருபெரும் ஜாம்பவான்கள்

14/10/2016
Firday (வெள்ளிக்கிழமை)

                 திரு.எம்.எஸ். உதயமூர்த்தி                                                     முனைவர் திருப்பூர் கிருஷ்ணன்


சென்னையில் நேற்று  நடைபெற்ற இலக்கிய விழாவில் தலைமையேற்று பேசிய முனைவர் திருப்பூர் கிருஷ்ணன், தனக்கு நிகழ்ந்த நகைச்சுவை நிகழ்வை பேசும்போது குறிப்பிட்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு "நம் டீவி" என்ற தொலைக்காட்சி இருந்தது.  அதில் ஒய்வு பெற்ற வானொலி இயக்குநர் திரு. விஜய திருவேங்கடம் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். அந்த தொலைக்காட்சிக்கு டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி அவர்களை நேர்காணல் செய்வதற்காக முனைவர் திருப்பூர் கிருஷ்ணனை திரு.விஜய திருவேங்கடம் அழைத்தார். முனைவர் திருப்பூர் கிருஷ்ணனும் சென்றார். டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தியும் முனைவர் திருப்பூர் கிருஷ்ணனும் பரஸ்பரம் விசாரித்து விட்டு அமர்ந்திருந்தார்கள். 5 நிமிடம் சென்றது, அவர்களைச் சுற்றி ஒளிப்பதிவு செய்வவதற்கு தேவையான காமிராக்கள் எதுவும் இல்லை. 10 நிமிடங்கள் சென்றது. நிலைமை மாறவில்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சி என்பதால் தங்களுக்கு ஒப்பனை செய்துவிட யாரும் வரவில்லையே என்று ஒருத்தொருக்கொருத்தார் விசாரித்துக்கொண்டார்கள்.  சில நிமிடங்கள் கழித்து, அவர்கள் இருவரும் ஒய்வறை எங்கே இருக்கிறது என்று விசாரித்து, அங்கு சென்று, அவர்களாகவே தங்களை ஒப்பனை செய்துகொண்டு மீண்டும் இருக்கைக்கு வந்து அமர்ந்தார்கள். அடுத்த சில நிமிடங்களில் அங்கு வந்த திரு. விஜய திருவேங்கடம், மன்னிக்கவும், சொல்ல மறந்துவிட்டேன், இது ஒரு ஆடியோ நேர்காணல்தான், 6 மாதங்கள் கழித்துதான் நிகழ்சிகளை வீடியோ பதிவு செய்ய இருக்கிறோம் என்று சொன்னார். இதில் நகைச்சுவை என்னவென்றால், இருபெரும் ஜாம்பவான்களும், இது ஒரு ஆடியோ நேர்காணல்தான், தொலைக்காட்சிக்கான நேர்காணல் அல்ல  என்று தெரியாமலேயே சுயமாக ஒப்பனை செய்துகொண்டார்கள்.





ஹிந்தி பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு உடல் நிலை சரியில்லை (Lataji not keeping well)

12-10-2016
Wednesday (புதன்கிழமை)

மும்பை:

லதா மங்கேஷ்கர்


பிரபல ஹிந்தி பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு உடல் நிலை சரியில்லை என்று மும்பையிலிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றது. இத்தகவலை "சரிகம" தலைவர் சஞ்சீவ் கோயங்காவும் உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் லதா மங்கேஷ்கருக்கு  வரும் 20ந்தேதி நேரிடையாக சென்று வழங்கப்பட இருந்த மேற்கு வங்க மாநிலத்தின் மிக உயரிய விருதான "பங்காபிபூஷன்" விருது வழங்கும் விழா நவம்பர் மாதம் ஒத்திப்போடப்பட்டுள்ளது.












இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிக்காக பாடிய ஹரிசரண்

09-10-2016
Sunday (ஞாயிற்றுக்கிழமை)
பாடகர் ஹரிசரண்

ஹரிசரண், சென்னையைச் சேர்ந்த இவர் அனைத்திந்திய மொழிகளில் பாடிவரும் பிரபல பின்னணி பாடகர்.  தற்போது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் விளையாடும் கேரளா கால்பந்து குழுவை (Kerala Blasters Football Club) உற்சாகப்படுத்தும் வகையில் பின்னணி பாடகர் ஹரிசரண் ஒரு பாடலை பாடியுள்ளார்.  இப்பாடல் கேரள கால்பந்து ரசிகர்களிடையே வைரலாக பரவிவருகிறது. பாடலுக்கான வரிகளை மனு மஞ்சித் எழுதியுள்ளார். நிகில் ஆர். நாயர் இசையமைத்துள்ளார்.





ரஞ்சனி - காயத்ரி சகோதரிகளுக்கு இந்திரா சிவசைலம் விருது வழங்கப்பட்டது

08-10-2016
Thursday (சனிக்கிழமை)

Ranjani-Gayathri Sisters (ரஞ்சனி-காயத்ரிரி)
 கர்நாடக இசைப் பாடகிகளான ரஞ்சனி-காயத்ரி சகோதரிகளுக்கு 2016ஆம் ஆண்டிற்கான இந்திரா-சிவசைலம் விருது நேற்று மியுசிக் அகாதெமியில் நடைபெற்ற சீர்மிகு விழாவில் வழங்கப்பட்டது. பின்னர் இருவரின் இசைக்கச்சேரியும் நடைபெற்றது.                                                   
                                                           

விஜய்யின் அடுத்த படத்திற்கு இசை ஏ.ஆர். ரகுமான்?

06-10-2016
Thursday (வியாழக்கிழமை)



விஜய்யின் அடுத்த படத்திற்கு  ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பார் என்றும் இதற்கான பேச்சுவார்த்தை ஆரம்பித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தை தயாரிப்பவர்கள் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ், படத்தை இயக்குபவர், தெறி படத்தை இயக்கிய அட்லி. விஜய்யின் "அழகிய தமிழ் மகன்" படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.







கர்நாடகா போலிஸ் இசைக்குழுவின் மயக்கவைக்கும் இசை (Karnataka Police Band to mesmerize )

05-10-2016
Wednesday (புதன்கிழமை)

கர்நாடகா போலிஸ் இசைக்குழுவைச் சேர்ந்த 500 இசைக்கலைஞர்கள், வியாழக்கிழமையன்று (06-10-2016) மைசூருவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள மைசூரு அரண்மனை முன்பு  பல்வேறு பாடல்களை வாசிக்க உள்ளனர். 

நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது, குறிப்பாக மைசூருவில் நடைபெற்றுவரும் நவராத்திரி எனும் தசரா பண்டிகை மிகவும் புகழ் பெற்றதாகும். விழாவின் ஒரு பகுதியாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள போலிஸ் இசைக்குழுவில் வாசிக்கும் அனைத்து கலைஞர்களையும் ஒன்று திரட்டி வருகின்ற வியாழக்கிழமையன்று ஒரே நேரத்தில் அத்துனை கலைஞர்களையும் வாசிக்க வைக்க உள்ளனர். 

இந்த இசையில் கர்நாடக சங்கீத பாடல்கள், ஹிந்துஸ்தானி பாடல்கள் முதலியவற்றை இசைக்க உள்ளனர். 

வந்தே மாதரம் பாடலை கர்நாடகா போலிஸில் உள்ளள ஆங்கில இசைக்குழு வாசிக்க உள்ளது.  

நிகழ்ச்சியின் நிறைவாக  "சாரே ஜஹான்சே அச்சா (Saare Jahanse Accha) என்ற பாடலை வாசிக்க உள்ளனர். 




முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் புதிய இசை ஆல்பம்

05/10/2016
Wednesday (புதன்கிழமை)

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். இவர் தற்போது, சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளராக இருக்கிறார்.  பிரபல ஹிந்தி திரைப்பட பாடகர் கிஷோர்குமாரின் தீவிர ரசிகர். கிஷோர்குமார் பாடிய ரபீந்தரநாத்தின் பாடல்களைக் கேட்ட சஞ்சய், ரபீந்தரநாத்தின் 6 பாடல்களை தொகுத்து "அமர் பேலா ஜி ஜே" (Amar Bela Je Jay) என்று பெயரிட்டு  ஆல்பமாக வெளியிட்டுள்ளார்.  இதன் வெளியீட்டு விழா நேற்று கோல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் சவ்ரவ் கங்குலி ஆல்பத்தை வெளியிட்டார். 



"ஆண் தேவதை" படத்திற்கு இசை ஜிப்ரான்

03/10/2016
Monday (திங்கள்கிழமை)

"சென்னை டூ சிங்கப்பூர்" திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான், "ஆண் தேவதை" என்ற படத்திற்கு இசையமைக்க தயாராகிவிட்டார்.
ஜிப்ரான்

இப்படத்தை இயக்குபவர் தாமிரா. இவர் மறைந்த திரைப்பட இயக்குநர் திரு. கே. பாலசந்தரிடம் உதவியாளராக இருந்தவர். இயக்குநர் சமுத்திரகனி மற்றும் ஜோக்கர் படப்புகழ் ரம்யா பாண்டியனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

எம்.எஸ் சுப்புலஷ்மிக்கு சிறப்பு தபால்தலை

03/10/2016
Monday (திங்கள்கிழமை)



பிரபல கர்நாடக இசைப்பாடகி மறைந்த திருமதி எம்.எஸ்.சுப்புலஷ்மியின் 100வது பிறந்த நாளை கௌரவிக்கும் வகையில் ஐக்கியநாட்டு சபை (United Nations) சிறப்பு தபால்தலை (Special Stamp) ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கான விழா நேற்று அமெரிக்காவில் நடைபெற்றது, விழாவில் திருமதி. சுதா ரகுநாதனின் இசைக்கச்சேரி நடைபெற்றது. கச்சேரியில் ஏழு மொழிகளில் பாடி ரசிகர்களின் பலத்த கரகோஷத்தைப் பெற்றார்.

நடிகர் மோகனுக்காக பாடிய பாடகர் கமல்

01/10/2016
Saturday (சனிக்கிழமை)

உலகநாயகன் கமல்ஹாசன், தான் நடிக்கும் படங்களில் குறைந்தபட்சம் ஒரு பாடலாவது பாடிவிடுவார். ஆனால், மற்ற நடிகர்கள் நடிக்கும் படங்களில், மிகவும் அரிதாக பின்னணி பாடுவார். அந்த வகையில் நடிகர் மோகனுக்காக இந்தப்பாடலை பாடியுள்ளார்


இந்தப்பாடலை கமல் பாடிய சூழல் மிகவும் சுவாரஸ்யமானது. இதைப்பற்றி, பாடலை எழுதிய கவிஞர் மு.மேத்தா அவர்களிடம் கேட்டோம்.  

இந்தப்பாடல் பிரசாத் ஸ்டுடியோவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.  மெட்டுக்கு எழுதிய பாடல், முழுப்பாடலையும் எழுதி, இளையராஜாவிடம் காண்பித்தேன், பாடல் வரிகள் நன்றாக உள்ளது என்று சொல்லி இசையமைக்கத் தொடங்கினார். பாடலுக்கான முழு இசைச்சேர்ப்பு பணி முடிந்தது. யாரை பாட வைக்கலாம் என்று பேசிக்கொண்டிருந்த போது, தற்செயலாக கமல் இளையராஜாவை பார்க்க உள்ளே வந்து கொண்டிருந்தார், இதை கவனித்த இளையராஜா, கமலை ட்ராக் பாட வைப்போம் என்று சொன்னார்.  நானும் சரி என்று சொன்னேன். ட்ராக்கில் பதிவு செய்த பாடலை கேட்டோம். கமல் பாடியதே நன்றாக உள்ளது என்று நான் சொன்னேன். நான் இதைச் சொன்ன போது கமல் இல்லை. அதற்கு இளையராஜா, இல்ல, முன்னணி பாடகர்  பாடினா இன்னும் நன்றாக இருக்கும் என்றார். 

ஒரு சில மணி நேரம் கழித்து, கமல் பாடியதையே வச்சுக்குவோம், நன்றாக பாடியுள்ளார், மேலும், முன்னணி பாடகரின் குரல் உலகம் அறிந்தது. இந்தப்பாட்டிற்கு கமலின் குரல் வித்தியாசமாக உள்ளது என்றேன்.

அதற்கு இளையராஜா, கமல் பாடியதையே வச்சுக்கலாம்னு சொல்றீங்க, அப்படித்தானே, சரி கமல் பாடியதையே வச்சுக்குவோம் என்றார். 

இப்படித்தான் இந்தப் பாடலை அன்பு நண்பர் கமல் பாடினார் என்றார் கவிஞர் மு.மேத்தா. 

இளையராஜவின் இசையில் "பொன்மானை தேடுதே" பாடல் 80களில் மட்டுமல்ல இன்றும் கூட சூப்பர் ஹிட் பாடலாகும். கேட்டுப்பாருங்களேன்.

கர்நாடக சங்கீத பாடகர் ஒ.எஸ். அருணின் ஆலாபனா ட்ரஸ்ட் பற்றிய ஆவணப்படம் மற்றும் கச்சேரி

29/09/2016
(வியாழக்கிழமை) Thursday

பாடகர் திரு. ஒ.எஸ். அருண்

திரு. ஒ.எஸ். அருண், பிரபல கர்நாடக சங்கீத வித்வான், சங்கீத உலகில் 30 வருட அனுபவம். உள்நாட்டிலும் மற்றும் வெளிநாட்டிலும் ஏராளமான கச்சேரிகள் செய்துள்ளார். 

இது தவிர, இவரும் இவரது மனைவியும் இணைந்து ஆலாபனா என்ற பெயரில் கடந்த 18 ஆண்டுகளாக ட்ரஸ்ட் நடத்தி வருகின்றனர். இந்த ட்ரஸ்ட் மூலம் தமிழ்நாட்டில் பல்வேறு  இடங்களில் ஏழைகளுக்கு மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சென்னை தரமணியில் உள்ள அனாதை இல்லத்திற்கு சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு  இலவசமாக ஆடைகளை வழங்கி மதிய விருந்து கொடுத்தார்.  அதற்கு முன்பு, குழந்தைகளுக்காக அவர் நடத்திய கச்சேரி என் கண் முன் வந்து போகிறது. 

30-09-2016 அன்று, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில், மாலை 6.30 மணிக்கு ட்ரஸ்ட் மூலமாக நடைபெற்ற பல்வேறு பணிகளை தொகுத்து ஆவணப்படமாக திரையிடுகிறார். 30 நிமிடங்கள் ஓடக்கூடியது இப்படம். அதன் பிறகு , இரவு 7 மணிக்கு திரு. ஓ.எஸ். அருண் அவர்களின் கச்சேரி ந்டைபெறும். 

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கும் "இமைக்கும் நொடிகள்"

29/09/2016
Thursday (வியாழக்கிழமை)

                இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி
இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து விசால் நடித்துள்ள "கத்திச் சண்டை" தமிழ்ப்படம் வெளியீட்டிற்கு தயராக உள்ளது. இதற்கிடையே, அஜய் ஞானமுத்து தயாரிக்கும் "நொடிக்கும் இமைகள்" என்ற தமிழ்த் திரைப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்திற்கான இசையமைப்பு பணியை அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ளார்.

அண்ணாசாமியின் கீர்த்தனைகள்

25/06/2016
Sunday (ஞாயிற்றுக்கிழமை)

அண்ணாசாமி சாஸ்திரி, கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகளில் ஒருவரான ஸியாமா சாஸ்திரிகளின் பேரன் ஆவார். பஞ்சு சாஸ்திரியின் மகன், இயற்பெயர் "சியாம கிருஷ்ணா" அண்ணா என்று மரியாதையுடன் அழைக்கப்பட்டார். தந்தையாரிடம் காவியம், நாடகம், அலங்காரம், வியாகரணம், சங்கீதம் முதலியவகளை கற்றுத் தேர்ந்தார்.  சிறந்த வர்ணங்கள் மற்றும் கிருதிகளை சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கு மொழிகளில் எழுதியுள்ளார். இவர்களுடைய கிருதிகளில் புகழ் பெற்றவை சில

                 ஸ்ரீ காஞ்சி நகரா நாயகி - அசாவேசி ராகம் - ஆதி தாளம்
                 பரமபாவனி - அடானா ராகம் - ஆதி தாளம்
                 ஸ்ரீமகாரஞ்சலி - பிலஹரி ராகம் 
                 ஸ்ரீகாமாட்சி - சாரங்கா - ஆதி தாளம்

இவருடைய நெருங்கிய நண்பர் வீணை குப்பய்யர்.  இருவரும் அடிக்கடி சந்தித்து கடினமான கற்பனைச் சுரங்களை பாடி மகிழ்வதுண்டு. தமது 73வது வயதில் 17/02/1900 காலமானார். இவரது பல இசை பனுவல்கள் இவரது நுண்ணிய இசை புலமைக்கு எடுத்துக்காட்டாகும்,



மறக்கப்பட்ட மாபெரும் நாடகக்கலைஞர் ஆர்.வி. உடையப்பா (R.V. Udaiyappa - The forgotten Tamil Drama Artist)

20/09/2016
Tuesday (செவ்வாய்க்கிழமை)

தமிழ் நாட்டின் தென் மாவட்டங்களில் இருந்துதான் அதிக அளவில் நாடகக்கலைஞர்கள் பல்வேறு சமூக வரலாற்று நாடகங்களை மேடையேற்றினர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் மறைந்த நாடக மேதை கலைமாமணி திரு. ஆர்.வி. உடையப்பா. 

அவரைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள


ட்ரம்பெட் வாசிக்கும் 7 வயது சிறுமி

17/09/2016
Sunday (ஞாயிற்றுக்கிழமை)


அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள ஸ்டிவன்சன் யுனிவர்சிட்டி (Stevension University) உள்  விளையாட்டு  அரங்கில் ஜூடி (Judy) எனும் 7 வயது இசை மேதை ட்ரம்பெட் (Trumpet) வாசித்து அரங்கில் இருந்த அனைவரின் பலத்த கரகோஷத்தைப் பெற்றுள்ளார். இதோ அந்த வீடியோ மற்றும் புகைப்படம்.



இனிய ஓணம் வாழ்த்துகள்

14/09/2016
Wednesday (புதன்கிழமை)

கேரள வாழ் மக்களுக்கு இனிய ஓணம் வாழ்த்துகள். இத்தருணத்தில், சூர்யகாயத்ரி பாடிய ஓணம் பாடலை வழங்குகிறோம்.


மும்பையில் எம்.எஸ் அம்மாவின் நூற்றாண்டு விழா துவக்கம்

10-09-2016
Saturday (சனிக்கிழமை)

திருமதி. எம்.எஸ். சுப்புலஷ்மி


கர்நாடக இசை மேதை மறைந்த திருமதி. எம்.எஸ். சுப்புலஷ்மியின் நூற்றாண்டு விழா, கடந்த ஆண்டு மும்பை, ஷண்முகாநந்தா ஹாலில் தொடங்கிய நிலையில், வருகின்ற 12ஆம் தேதி தொடங்கும் ஒரு வாரகால கொண்டாட்டங்களோடு நூற்றாண்டு விழா நிறைவு பெறுகிறது. டாக்டர். திருமதி. எம்.எஸ். சுப்புலஷ்மி விருதுகள், இந்தியாவின், மதிக்கதக்க ஏழு (7) பெண் கலைஞர்களுக்கு வழங்கப்பட உள்ளன. அவர்கள், வாய்ப்பாட்டுக் கலைஞர்களான, கிரிஜா தேவி, கிஷோரி அமோன்கர், அருணா சாய்ராம், விசாகா ஹரி, பரத நாட்டிய கலைஞர்கள், யாமினி கிருஷ்ணமூர்த்தி, வைஜெயந்திமாலா மற்றும் பாண்டவானி கலைஞர் தீஜன் பாய்.

இவ்விழாவில், திருமதி. எம்.எஸ். சுப்புலஷ்மி பாடிய பிரபல பாடல்களுக்கு 100 பரதநாட்டிய கலைஞர்கள் நாட்டியமாட உள்ளனர். திருமதி. எம்.எஸ்ஸின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் “காற்றினிலே வரும் கீதம்” என்ற தலைப்பில் நாடகம் நடத்தப்பட உள்ளது.


மேலும், இந்தாண்டுக்கான “சங்கீத ப்ராச்சாரியா” விருது கடம் கலைஞரும் கிராமி விருது பெற்றவருமான விக்கு விநாயகராமிற்கு வருகின்ற 14ஆம் தேதி வழங்கப்பட உள்ளது. இம்மாதம் 18ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, பேகம் பர்வீன் சுல்தானா மற்றும் பரத் கே. சுந்தரின் கச்சேரியோடு விழா நிறைவு பெறுகிறது. மும்பையில் எம்.எஸ் அம்மாவின் நூற்றாண்டு விழா துவக்கம்.